திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆதார் கேட்டு விண்ணப்பித்த இருளர் இன மக்களுக்கு ஒரு சில நாட்களில் ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வந்த தங்களுக்கு முதல்வர் அறிவிப்பால் உடனடியாக வழங்கியதற்கு இருளர் இன மக்கள் முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை எந்த சான்றிதழ்களும் இல்லாமல் ஆண்டாண்டு காலமாக அரசின் எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாமல் தவித்து வந்தனர். இதனால் தங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் இருளர் இன மக்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பது அரிதாகவே இருந்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இருளர் இன மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.