நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு

*பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

 

பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் அருகே 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக போதிய மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் 40.90 அடியாக குறைந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மஞ்சளாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளான பாலமலை, பெருமாள்மலை, பண்ணைக்காடு, வடகரை பாறை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்று முன்தினம் காலை அணைக்கு நீர்வரத்து 80 கனஅடியாகவும், நேற்று 113 கனஅடியாகவும் உயர்ந்தது. இதனால், மஞ்சளாறு அணை நீர்மட்டம் 40.90 அடியிலிருந்து 43 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து நீர்வெளியேற்றம் இல்லை. மஞ்சளாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: