நீதிமன்றத்திற்கு தவறான தகவலை கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் ஆஜராக வேண்டும்: ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு

சென்னை: வரதட்சணையால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை கொடுத்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் நாளை நேரில் ஆஜராகுமாறு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரஜினி ஸ்ரீ (30). இவர், கடந்தாண்டு ஜூலை 8ல், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் அருண்குமார் மீது வரதட்சணை புகார் அளித்தார். இப்புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து,  புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி ஸ்ரீ வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, 15வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் முரளிகிருஷ்ணா ஆனந்தன் முன் விசாரணையில் உள்ளது.

இவ்வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, புகார் மீது விசாரணை செய்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோக்குமார், மனுதாரர் புகாரை திரும்பப் பெறவில்லை. பெண் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அவர், இதுவரை தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று வாதிட்டு அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதி, பெண் ஆய்வாளர் பிரியதர்ஷினி, நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

Related Stories: