சென்னை: சென்னையில் 3 இடங்களில் 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 34,57,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில் சென்னை அனைவருக்கும் முன்னுதாரணமாக பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தியது 94.36 சதவீதம். சென்னையில் 99.72 சதவீதமாக உள்ளது. இதேபோன்று 2ம் தவணை தடுப்பூசி தமிழகத்தில் 84.85 சதவீதமாகவும், சென்னையில் 85.51 சதவீதமாகவும் உள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை பொறுத்தவரையில் 40 சதவீம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 60 வயதை கடந்தவர்கள் இணை நோயுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.