சென்னையில் 3 இடங்களில் 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் 3 இடங்களில் 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 34,57,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில் சென்னை அனைவருக்கும் முன்னுதாரணமாக பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தியது 94.36 சதவீதம். சென்னையில் 99.72 சதவீதமாக உள்ளது. இதேபோன்று 2ம் தவணை தடுப்பூசி தமிழகத்தில் 84.85 சதவீதமாகவும், சென்னையில் 85.51 சதவீதமாகவும் உள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை பொறுத்தவரையில் 40 சதவீம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 60 வயதை கடந்தவர்கள் இணை நோயுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சுமார் 40 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் உள்ளனர். 1 கோடியே 15 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் வரை பொதுமக்கள் காத்திருக்காமல் தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகராட்சி சமுதாய நல மையங்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 4 மண்டலங்களில் கொரோனா தொற்று சற்று அதிகமாக உள்ளது. சென்னையில், ஒரு வட்டாரத்திற்கு ஒரு இடம் என 3 இடங்களில் தலா 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் தொடங்க மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: