ஈரோடு அருகே ஆடு திருடனை எட்டி உதைத்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்; வீடியோ வைரலால் எஸ்பி நடவடிக்கை

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே காவிலிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (51). விவசாயி. இவர் தோட்டத்தில் வெள்ளாடுகளை கட்டி வைப்பது வழக்கம். கடந்த 2ம் தேதி பைக்கில் வந்த 2 பேர் இவரது ஆடுகளை திருட முயன்றனர். அப்போது ஆடுகள் சத்தம் கேட்டு நாகராஜ் மற்றும் பொதுமக்கள் திரண்டு அவர்களை விரட்டிச்சென்றனர். அதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி விட்டார். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் கொட்டக்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்த குமார் (40) என்பது தெரியவந்தது.

குமாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வந்தனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் பொதுமக்கள் முன்னிலையில் ஆடு திருடன் குமாரை காலால் எட்டி உதைத்தார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.  இந்த வீடியோ வைரலானதையடுத்து ஈரோடு எஸ்பி சசிமோகன் விசாரணை நடத்தி, பொதுமக்கள் முன்னிலையில் ஆடு திருட முயன்றவரை எட்டி உதைத்த எஸ்எஸ்ஐ முருகேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: