முதல் திருமணத்தை மறைத்து சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி மணந்த வாலிபருக்கு 37 ஆண்டுகள் சிறை; புதுக்கோட்டை கோர்ட் தீர்ப்பு

புதுக்கோட்டை: சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (40). இவருக்கு, சமூக வலைதளம் வழியாக புதுக்கோட்டை வசந்தபுரிநகரை சேர்ந்த சோலை மகன் கணேசன் (37) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும், கடந்த 2010ல் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 2018ல் ஆரோக்கியமேரி, புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளது. இதை மறைத்து, தன்னை 2வதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.

திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.72 லட்சம் பெற்றுக் கொண்டதோடு, மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்கிறார். 3வதாக 17வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, குற்றவாளியான கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இதற்கு உடந்தையாக இருந்த கணேசனின் தாய் ராஜம்மாளுக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சகோதரி கமலஜோதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், உறவினர் நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து, 4 பேரும் தங்களது சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

Related Stories: