பொதுப்பணித்துறை மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமைச் செயலகத்தில் ஆய்வு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (13.6.2022) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுப்பணித்துறை மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.  

சென்னை மண்டலத்தில் பொதுப்பணித்துறையால், பல்வேறு கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், மருத்துவமனை கட்டடங்கள், மணி மண்டபங்கள் போன்றவை கட்டப்பட்டு வருகிறது.  இப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று (13.6.2022) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பொதுப்பணித்துறையின், அதிகாரிகள் அனைவரும் கட்டடங்கள் கட்டுவதில், நவீன முறைகளை கடைபிடித்து, முகப்பு தோற்றம் (Front Elevation) எழில்மிக்கதாக இருக்க வேண்டும் என்றும், அதற்காகவே முதலமைச்சர் அரசு ஆரம்ப சுகதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாணவ-மாணவியர் தங்கும் விடுதிகள், நகர் ஊரமைப்பு இயக்கக  அலுவலகங்கள் ஆகியவற்றின் புதிய முகப்பு தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள். இனிமேல், கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், இந்த முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும்.  

பொதுப்பணித்துறை கட்டடங்களில், தரத்தை உறுதி செய்ய வேண்டும்.  “தரமே தாரக மந்திரமாக“ இருக்க வேண்டும். எழில்மிகு தோற்றம், தரமிக்க கட்டடம், இதுவே பொதுப்பணித்துறையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நில எடுப்பிற்கு நிலத்திட்ட அட்டவணை தயாரிக்கும்போது, தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான இடம் தேர்வு செய்யப்படாததால், பல இடங்களில் கட்டுமான பணி தாமதம் ஏற்படுகிறது.   கோயில் நிலங்களைத் தேர்வு செய்யக்கூடாது.

மதிப்பீடு தயார் செய்யப்படும்போது, என்னனென்ன தேவைப்படுகிறதோ, அதையெல்லாம் சேர்த்து மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளடக்க வேண்டும். 10% சதவீதத்திற்கு மேல் (RAS), திருத்திய நிர்வாக அனுமதி கேட்கும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  

* வேலூர் விளையாட்டு மைதானம் இன்னும் வேலை முடிக்காமல், இன்று வரை ஒப்படைக்கவில்லை.

* பொறியாளர்கள் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும்.

* பொறியாளர்கள் பணிகளின் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்னும் கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை.  27.7.2022க்குள் பணியை முடிக்க வேண்டும்.

* இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தொற்று நோய் அவசரச் சிகிச்சை கட்டிடம் விரைவாக பணி முடிக்கப்பட வேண்டும்.

* சைதாப்பேட்டை, தாடண்டர் நகர், அரசு அலுவலர் குடியிருப்பு பணியினை விரைவாக முடிக்கவும்.

இதைப்போன்று பொதுப்பணித்துறையால், கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வரும், கட்டடங்களையும் அவற்றின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்கள்.  காலதாமத்தை தவிர்த்து குறிப்பிட்ட ஒப்பந்தக் காலத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

 

அனைத்துத் துறைகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள், பொதுப்பணித்துறையில், மருத்துவமனை கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்  ஆகிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகளையும், ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார்கள். பொது மக்களுக்கு சேவை செய்வதே மருத்துவத்துறையின் தலையாயப் பணி.

அப்பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வண்ணம், மருத்துவமனை சார்ந்த கட்டடங்களை சரியான முறையில் திட்டமிட்டு, விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மைப் பொறியாளர் ஆர்.விஸ்வநாத், தலைமைக் கட்டிட வடிவமைப்பாளர் எஸ். மைக்கேல் மற்றும் சென்னை மண்டல அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: