நெமிலி : நெமிலி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறைகள் முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்கள் உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் தரமற்ற கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி என 90க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட நெமிலி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 40க்கும் மேற்பட்ட பழுதடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும், தகவல் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பயன்படுத்தப்படும் அரசு பள்ளி கட்டிடங்கள் ஏற்கனவே விரிசல்கள் வீட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் பயத்துடன் பள்ளிக்கு வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.