இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: திருமண மண்டபம், திருக்குளப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.43.68 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.9.67 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.6.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக ரூ.43.68 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்களில் திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், வைணவ பிரபந்த பாடசாலை, பக்தர்கள் தங்கும் மண்டபம், கம்பிவட ஊர்தி கீழ் நிலையம், திருக்கோயில் பள்ளிகள் கூடுதல் கட்டடம், வணிக வளாகம் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், வணிக வளாகம், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், திருக்குளம் புதுப்பித்தல், திருமண மண்டபம், வாகனப் பாதுகாப்பு மண்டபத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் போன்ற முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களின் வளர்ச்சிக்கான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, 100க்கும் மேற்ப்பட்ட  திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு,  பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல்,  திருக்கோயில்களில் திருப்பணிகள்  போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி “இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம்” என்று பக்தர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

அந்த வகையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்ததேஸ்வரர் திருக்கோயிலில், ரூ.14.76 கோடி மதிப்பீட்டில் வீரவசந்தராயர் மண்டபம், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள்; செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், ஆன்மிகச் செம்மல் ஆளவந்தார் அறக்கட்டளையில் 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைணவ பிரபந்த பாடசாலை கட்டும் பணி;  சென்னை, கொசப்பேட்டை, அருள்மிகு கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் திருக்கோயிலில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; சென்னை, மாதவரம், அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புது திருக்குளம் அமைக்கும் பணி; விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய முடிகாணிக்கை மண்டபம், விருந்தினர் அறை,

சேவார்த்திகள் ஓய்வுக்கூடம், இரண்டு திருக்குளங்கள் புனரமைக்கும் பணிகள்; சிவகங்கை மாவட்டம், மடப்புரம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் மண்டபம் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் கட்டும் பணிகள்; விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபம் கட்டும் பணி; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அருள்மிகு கொப்புடை நாயகியம்மன் திருக்கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை அமைக்கும் பணி; திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழை தோட்டத்து அய்யன் திருக்கோயில் மேல்நிலைப் பள்ளியில் ரூ.96.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்;

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; கரூர் மாவட்டம், குளித்தலை, அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.78.80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கம்பி வட ஊர்தி கீழ் நிலையம், கட்டணச் சீட்டு விற்பனை அறை, வரிசையில் நிற்பதற்கு மண்டபம் கட்டும் பணிகள்;  மதுரை மாவட்டம், அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.62 இலட்சம் மதிப்பீட்டில் கோட்டைச்சுவர் கட்டும் பணி, ரூ.38.50 இலட்சம்  மதிப்பீட்டில் ஆடி வீதியில் கல்தளம் அமைக்கும் பணி, ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் நுழைவுவாயிலில் இருந்து அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயில், அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் வரை மலைப்பாதை, 4.2 கி.மீ அளவுக்கு தார்சாலை மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்;

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் மதிப்பீட்டில் மலைக்கோயிலுக்கு செல்லும் யானைப்பாதையில் கழிப்பறைகள் கட்டும் பணி; கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, அருள்மிகு மகா தேவர் திருக்கோயில் பள்ளிக் கட்டடங்களை ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கும் பணி; அழகர்மலை, அருள்மிகு முருகன் திருக்கோயிலி ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை மற்றும் வளாகம் கட்டும் பணிகள்; திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில், ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் மின் இணைப்பு வசதி;    என மொத்தம் 43 கோடியே 68 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திருக்கோயில் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் ரூ.2.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி; கடலூர் மாவட்டம், சிதம்பரம், அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோயிலில் ரூ.2.62 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட திருக்குளம்; மதுரை மாவட்டம், சோழவந்தான், அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி திருக்கோயிலில் ரூ.15 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம்; மயிலாடுதுறை மாவட்டம், கும்பகோணம், இன்னம்பூர், அருள்மிகு எழுத்தரிநாதர் திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ரூ.61 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை மற்றும் குளியல் அறைகள்;

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.57 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபம்; திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம், அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.49 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் ஓய்வுக்கூடம்; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.48 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.48 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள்; தேனி மாவட்டம், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.30 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம்;

கரூர், அருள்மிகு அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ரூ.30 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், அருள்மிகு பச்சையம்மன் மன்னார் சுவாமி திருக்கோயிலில் ரூ.28 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி; விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.26 இலட்சம் செலவில் தரைத்தளத்தில் வாகன பாதுகாப்பு மண்டபம் மற்றும் முதல் தளத்தில் அலுவலகக் கட்டடம்;  என மொத்தம் 9 கோடியே 67 இலட்சம் ரூபாய்  செலவில் முடிவுற்ற திருக்கோயில் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, சுற்றுலா,

பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் திரு. இரா. கண்ணன், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. செல்வம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., மதுரை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜி. தளபதி, திரு. எம். பூமிநாதன், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  மரு. எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கர் திரு. கருமுத்து தி. கண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: