திருவலம் பொன்னையாற்று இரும்பு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவு-இன்று முதல் போக்குவரத்திற்கு அனுமதி

திருவலம் : திருவலம் ெபான்னையாற்று இரும்பு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று முதல் போக்கவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவலம் இரும்பு பாலத்தின் சாலையில் 12 பாலங்களுக்கு இடையேயான 11 இணைப்பு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அதிலிருந்த கான்கீரிட் சிமெண்ட், ஜல்லி கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமங்களை அடைந்து வந்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மார்ச் 14ம்தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தில் உள்ள சாலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டிருந்த விரிசல்களுக்கு தார்கலவை பூசி தற்காலிக சீரமைப்பு செய்தனர். தொடர்ந்து, விரிசல்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென மார்ச் 24ம்தேதி மீண்டும் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, நெடுஞ்சாலைதுறையினர் நிரந்தரமாக பாலத்தின் சாலையில் ஏற்பட்டிருந்த விரிசல்களை சீரமைக்கும் பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சீரமைக்கும் பணிகள்  கடந்த ஏப்ரல் மாதம் 27ம்தேதி முதல் பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்து வாகனங்கள் திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட பொன்னை கூட்ரோடு பகுதியில் உள்ள பொன்னையாற்று புறவழிச்சாலை பாலத்தின் வழியாக போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், 12 பாலங்களுக்கான 11 இணைப்பு பகுதிகளில் இரும்பு சட்டங்கள் கம்பிகள் இணைப்புடன் புதைக்கப்பட்டு சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்து தொடர்ந்து அதன்மீது தார்கலவை பூச்சு மூலம் சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 27ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, பாலத்தின் சாலையில் இருந்த 36 சிறுவிரிசல்களுக்கு தார்பூசி சீரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் அப்பணிகளும் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் காட்பாடி உதவி கோட்டப்பொறியாளர் சுகந்தி தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு திறக்க உத்தரவிட்டதின்பேரில், இன்று காலை முதல் பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு திறக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: