பூந்தமல்லியில் போலீஸ் என கூறி திருமணம்: மனைவி கொடுத்த புகாரில் மோசடி ஆசாமி சிக்கினார்

பூந்தமல்லி: போலீஸ் என கூறி திருமணம் செய்துவிட்டதாக மனைவி கொடுத்த புகாரின்பேரில் மோசடி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.வேலூரை சேர்ந்தவர் தினகரன்(32). இவருக்கும் நிவேதா(26) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது பூந்தமல்லி லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், தனது கணவர் போலீஸ் என்று பொய் கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் வழக்குப்பதிவு செய்து தினகரனை பிடித்து விசாரித்தார். அதில் தினகரன் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் அடையாள அட்டை போல போலியாக அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு டிரைவராக இருப்பதாகவும் கூறி ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் தினகரன் ஆக்டிங் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். போலீஸ் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் அவர் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்ட போதுதான் அவர் மீது மனைவிக்கு சந்தேகம் வந்து விசாரித்ததில் அவர் போலீஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி போலீசில் புகார் செய்தார் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தினகரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டையை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: