ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளத்தை தூர்வாரி சுற்றிலும் பூங்காவாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகில் பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு பக்கத்தில் தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தை சுமார் 45 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த குளம் புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது. பழைய பேரூராட்சி பின்புறம் உள்ள இறைச்சி கடைகளின் கழிவுகள் இந்த குளத்தின் அருகில் கொட்டப்படுகிறது. இதனால் இந்த குளம் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. மேலும் தற்போது இந்த குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து குளமே தூர்ந்து விட்டது.எனவே, இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த 3 வருடத்திற்கு முன்பு குளத்தை சுற்றி பூங்கா அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.