சென்னை: சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மேலும் கலப்படத்தை தடுப்பது குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டது. சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், தனியார் கேன்டீனில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஓட்டல் ஊழியர்களுக்கு உணவு கலப்படம், சந்தைகளில் இருந்து கொண்டுவரும் பொருட்களில் எப்படி கலப்படத்தை கண்டு பிடிப்பது என்பது குறித்து அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர். பயன்படுத்தப்பட்ட எண்ணெய் அரசின் வழிகாட்டு நடைமுறைகளின்படி பயோ டீசல் பயன்பாட்டுக்கு அளிக்கும் நடைமுறை குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.