அறையில் திடீர் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் லாலு பிரசாத்

மெதினிநகர்: ஜார்கண்டில் லாலு பிரசாத் யாதவ் தங்கியிருந்த அறையில் மின்விசிறி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது 13 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் லாலு இன்று ஆஜராக உள்ளார். இதற்காக அவர் ஜார்கண்ட் மாநிலத்தின் பாலமு மாவட்டத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். இங்குள்ள அறையில் லாலு பிரசாத் நேற்று காலை 8 மணியளவில் உணவு அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அறையில் இருந்த மின்விசிறி தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அந்த அறையில் புகைமூட்டம் ஏற்பட்டது. அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த உதவியாளர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகின்றது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

Related Stories: