மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்: கமல்ஹாசன் தகவல்

சென்னை: தமிழில் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ‘விக்ரம்’. இப்படம் வெற்றிபெற காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: தரமான திரைப்படத்தையும், திறமையான நடிகர்களையும் தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் ‘விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். இசை அமைப்பாளர் அனிருத், சண்டைப் பயிற்சியாளர் அன்பறிவு என்று தொடங்கி, பெயர் தெரியாமல் பின்னணியில் பணியாற்றிய அனைவருக்கும், உங்கள் பாராட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம். விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், செம்பன் வினோத் ஜோஸ் போன்ற சிறந்த நடிகர்கள் இப்படத்தில் இருந்ததும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். கடைசி மூன்று நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த எனதருமை தம்பி சூர்யா, அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை, அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்றிருக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீதும், என்மீதும் உள்ள அன்பு, படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: