தமிழகத்தின் மொத்த மின் தேவையில் சென்னையின் மின் நுகர்வு 25 சதவீதம்

சென்னை: தமிழகத்தின் மொத்த மின் தேவையில் சென்னை நகரின் மின் நுகர்வு 25 சதவீதம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:சென்னையில் இந்த கோடையில் மின் நுகர்வு கடந்த காலங்களை விட அதிகரித்துள்ளது. அதாவது சென்னையின் ஒரு நாள் மின் தேவை 3,700 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.  கடந்த மே 4ம் தேதி மிக அதிகமாக 3,716 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்று சென்னையின் மொத்த மின் நுகர்வு 81.33 மில்லியன் யுனிட் என்ற அளவில் இருந்தது.

மேலும், நடப்பு ஆண்டில் சென்னையின் மொத்த மின் தேவை ஒரு நாளைக்கு 4 ஆயிரம் மெகா வாட் ஆக அதிகரிக்கக்கூடும். கடந்த ஏப்ரல் 29ம் தேதி தமிழ்நாட்டின் மின் நுகர்வு 17,563 மெகாவாட் மற்றும் ஒரு நாளைய மொத்த மின் நுகர்வு 388.08 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருந்தது. கோடை காலம் என்பதால் வீடுகள், அலுவலகங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். நடப்பு ஆண்டு கோடை காலத்தில் சென்னையின் மின் தேவை 3,100 மெகா வாட் என்ற அளவில் இருந்து குறையவே இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் சென்னையின் பீக் ஹவர் மின் தேவை 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: