போரூர் ராமநாதீசுவரர் கோயில் சொத்து ஆக்கிரமிப்பு; புகாரை பரிசீலித்து நடவடிக்கை.! அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்த புகாரை உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துகள், நிலங்கள் அபகரிக்கப்படுவதாக  ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பல புகார்களை அளித்து வந்தார்.

ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளதால் கோயிலுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குத்தகைதாரர்களிடம் வசூலிக்க வேண்டிய பாக்கியும் அதிக அளவில் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கோயில் சொத்துகளை மீட்க  வேண்டுமெனவும், அதற்கான தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் அளித்த மனுக்களை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: