பள்ளிப்பட்டு : ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில் 6 கோயில்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடுகுப்பம் கிராமமக்கள் நிதி உதவியுடன் புதிதாக கமலவிநாயகர் கோயில் பொன்னியம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், சப்த கன்னியம்மன் கோயில் பக்த ஆஞ்சநேயருக்கு 20 அடி உயரத்தில் சிலை ஆகிய ஐந்து கோயில்கள், மேலும் கிராமத்தில் பழமையான சீதாராமர் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. கோயில்களின் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளநிலையில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்று. மஹாகும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில்கள் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. கோயில்களின் வளாகங்களில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி பூஜை, நவக்கரக ஹோமம், பூர்ணாஹூதி உட்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு மஹா பூர்ணாஹுதி பூஜைகளை தொடர்ந்து முதலில் பொன்னியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேகமும், கங்கை அம்மன், சப்த கன்னிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.