2021ல் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வின் விடைகளை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு: டிஎன்பிஎஸ்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 2021 ஜனவரி மாதம் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டதில், 60 கேள்விகளுக்கான விடைகள் தவறு என்றும் இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் எனக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நிபுணர் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தேர்வர்களுக்கும் அதற்கான உரிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிரித்து வேலுமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுக்களில், மாதிரி விடைகள் பற்றி விவாதிக்காமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என்று நிபுணர் குழு முடிவுக்கு வந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் ஆய்வு செய்திருக்க வேண்டும். எனவே, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து, அனைத்து கேள்விகளையும் பதில்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபிக் அடக்கிய அமர்வு, வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டிஎன்பிஎஸ்சி) உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: