ஆழியார் அணைக்கரையில் காட்டுயானைக் கூட்டம் முகாம்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான்,வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஆழியார் அணையை நோக்கி வருகின்றன. இதில் கடந்த சில நாட்களாக யானை கூட்டம் ஒன்று ஆழியார் அணையை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளது.

மாலை நேரங்களில் ஆழியாறு அணை கரையை ஒட்டி யானைகள் சுற்றி திரிகின்றன.இந்த யானைக் கூட்டத்தை காண வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குட்டியுடன் இருக்கும் யானைகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இருப்பினும் யானைக்கூட்டம் இருக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் நிற்கக் கூடாது என்றும், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கலக்குறிச்சி அருகே உள்ள நரிமுடக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாந்தோப்புக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை, அருகிலுள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து நேற்று தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. காட்டு யானையை கண்காணிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: