தேவதானப்பட்டியில் சூறாவளி காற்றுக்கு வெற்றிலை கொடிக்கால் நாசம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு வெற்றிலை கொடிக்கால், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்து நாசமாகின. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால், ஆங்காங்கே தென்னை மரங்கள் ஒடிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்கம்பங்கள் ஒடிந்தன. சில்வார்பட்டியில் வெற்றிலை கொடிக்கால் பல இடங்களில் வேறொடு ஒடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. அதே போல் வாழை மரங்களும் ஒடிந்து விழுந்தன.

சில்வார்பட்டி விவசாயிகள் நலச்சங்க பொருளாளர் எஸ்.முத்துக்காமாட்சி கூறுகையில், ‘ சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வெற்றிலை கொடிக்கால் மற்றும் வாழை, தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்தன. விளைநிலங்களுக்குள் மின்வயர்கள் மீது மரங்கள் விழுந்து வயர்கள் அறுந்துவிட்டன.

ஒரு ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் சாகுபடிக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். சூறைக்காற்றுக்கு வாழை, தென்னை, வெற்றிலை கொடிக்கால் சேதமானதால் ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய சேத மதிப்பு இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: