கலைஞர் சிலையாக மட்டுமல்ல நம் நெஞ்சில் நிலையாக நின்று கொள்கை முழக்கம் செய்கிறார்: சிலை திறப்பு விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிலையாக நின்று நிலையாக நமை வழிநடத்தும் தலைவர் கலைஞருக்கு அரசின் சார்பில் இன்று திருவுருவச் சிலை திறக்கப்படுகிறது. இவ்விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எழுச்சிமிகு சிந்தனையால், ஏற்றமிகு பேச்சாற்றலால், புரட்சிகர எழுத்துகளால், புதுமையான திட்டங்களால், இந்தியத் திருநாடு எண்ணி எண்ணிப் போற்றுகிற வகையில், தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞருக்கு தமிழக அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்.  தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமை நம் தலைவருக்கேயுரியது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலேயே அவருடைய திருவுருவச் சிலையை, தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், திமுகவின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வரவேற்புரையாற்றிட, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நம் உயிரனைய தலைவரின் திருவுருவச் சிலையினை மே 28ம் தேதி மாலை 5.30 மணி அளவில் திறந்து வைத்திட இருக்கிறார்.

 அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மவுண்ட் ரோடு’ எனப் பெயரிடப்பட்டு, உருவாக்கப்பட்ட சென்னையின் இதயப் பகுதிக்கு, ‘அண்ணா சாலை’ என்று பெயர் சூட்டியவர். தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்கே பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகையின் பெயரினைத் தமிழ்நாட்டின் தலைநகரின் இதயம் போன்ற முக்கியச் சாலைக்குச் சூட்டி, பெருமை சேர்த்தவர் கலைஞர். சென்னை மாநகராட்சியை முதன் முதலாக 1959ம் ஆண்டில் திமுக கைப்பற்றிடக் கடுமையாக உழைத்து, அந்த வெற்றிக்காக, அண்ணாவிடம் கணையாழியைப் பரிசாகப் பெற்றவர் கலைஞர். அவருடைய பேருழைப்பால் திமுக வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சியின் சார்பில், அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே பெருந்தலைவர் காமராசருக்கு சிலை அமைப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால், காமராசர் சிலை திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவர்களுக்கு அண்ணா சாலையில் சிலை அமைந்திடக் காரணமாக இருந்த கலைஞருக்கு, ஒரு சிலை அமைத்திட வேண்டும் என்பது பெரியாரின் எண்ணம். பெரியார் மறைவெய்திய பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சி எடுத்து, திக சார்பில் அண்ணா சாலையில் (இன்றைய தாராப்பூர் டவர்ஸ் சிக்னல் அருகே) கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது.

 அரசியல் - பொதுவாழ்வில் நேரான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது போல, தலையில் நேர்வகிடு எடுத்த இளமையின் விளிம்பிலான தலைவர் கலைஞரின் அழகிய தோற்றத்துடன் அமைந்த சிலை அது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் 1987ம் ஆண்டு மறைவெய்தியபோது, அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில தீயசக்திகளால், அன்றைய அரசின் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் கலைஞரின் சிலையினைக் கடப்பாரை கொண்டு தாக்கி, தகர்த்தெறிந்த அக்கிரமத்தை அண்ணாசாலை மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து எவராலும் அகற்ற முடியாத தனிப்பெரும் சாதனையாளர், தளராத உழைப்பாளி, சமரசமில்லாத சமூகநீதிப் போராளி நம் உயிர் நிகர் தலைவரின் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்வு, சென்னையில் மகத்தான விழாவாக நடைபெறுகிறது.

 அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு திருவுருவ சிலை கண்டோம். திருச்சியில், ஈரோட்டில், தூத்துக்குடியில் இன்னும் பல நகரங்களில் கழகத்தின் சார்பில் சிலை அமைத்து மகிழ்ந்தோம். அதனை இன்னும் பல ஊர்களிலும் தொடர்கிறோம். அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இயற்கை அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாலும், நம் இதயத்துடிப்பினில் அவரே நிறைந்திருக்கிறார். எந்நாளும் வழிநடத்துகிறார். மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது அவர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்.

 அந்த இலக்கணத்தின்படி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன், முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது கலைஞர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்

Related Stories: