மக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும்.. தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட அறிவுறுத்துக : மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!!

சென்னை : தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது.

சில குறிப்பிட்ட நிறுவனங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. சில குடும்ப நிகழ்ச்சிகளில் தோற்றாளர்களால் கொரோனா பரவும் நிலை உருவாகி உள்ளது. கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்காவிடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இணை நோய் உள்ளவர்களும் முதியவர்களும் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஆகவே லேசான அறிகுறிகள் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் மக்கள் தவறாமல் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.தடுப்பூசிக்கு பிறகு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து வருவதை தொற்று அதிகரித்து வருவது காட்டுகிறது. தமிழ்நாட்டில் 93.74% பேர் முதல் தவணை, 82.55% மக்கள் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.43 லட்சம் பேர் இன்னும் முதல் தவனையும் 1.22 கோடி பேர் 2வது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளவில்லை.இன்னும் தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடுகிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: