கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு தனியார் நூலகம் சார்பில் 40 லட்சம் வாடகை நிலுவை: அமைச்சர் சேகர்பாபுவிடம் காசோலை வழங்கப்பட்டது

சென்னை: மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு வாடகை பாக்கி வைத்திருந்த தனியார் நூலக நிறுவனம் சார்பில் முதற்கட்டமாக நியாய வாடகை நிலுவை தொகை  ₹40 லட்சத்திற்கான காசோலையை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம்  வழங்கப்பட்டது.இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லஸ் சர்ச் சாலை இடத்தில் 3 கிரவுண்ட்  736.5 சதுர அடியில் உள்ள ரானடே நூலகத்திற்கு தமிழ் வளர்ச்சி,  அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை உத்தரவின் அடிப்படையில் தனியே வாடகை  நிர்ணயம் செய்து கோயிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது. ரானடே  நூலகத்திற்கு நியாய வாடகை 0.1 சதவிகிதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்  நியாய வாடகை நிலுவை தொகை ₹79,10,860 செலுத்தாததால் மேற்படி நிறுவனத்தின்  வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டு பொருட்களுடன் சீலிடப்பட்டு கோயில் வசம்  சுவாதீனம் பெறப்பட்டது.

தற்போது ரானடே நிறுவனம் சார்பில் நிலுவைத்தொகை ₹40 லட்சம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம்  வழங்கப்பட்டது. மீதி தொகையை 3 மாத காலத்திற்குள் செலுத்துவதாக உறுதி  அளித்துள்ளனர். அதனால் அந்நிறுவனம் தொடர்ந்து நடத்த அனுமதி  வழங்கப்படுகிறது.இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  (பொறுப்பு) கண்ணன், கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோயில் இணை ஆணையர் காவேரி, தென்னிந்திய தேசிய சங்க ரானடே நூலக செயலர்   ஹேமந்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: