பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் பல்வேறு திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிர்வாகம் குறித்த ஆய்வு கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நேற்று நடந்தது.

 பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிர்வாகம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். பல்வேறு கடனுதவி திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 இத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி/ கல்லூரி விடுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வரும் கல்வி ஆண்டில் அனைத்து விடுதிகளிலும் ஒப்பளிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறையாமல் மாணவர்களை தங்க வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் கார்த்திக், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் துறைமுகம் காஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் அணில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மாபினர் நலத்துறை ஆணையர் மதிவாணன், சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பு செயலர் வா.சம்பத், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் நந்தகோபால் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: