திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, பிரதமரின் வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை வழங்க, பயனாளிகளிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் பணம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆரணி அருகே அத்திமலைபட்டு கிராமத்தில், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 2019-2020ம் ஆண்டு 22 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஓதுக்கபட்டன.
ஆனால், அத்திமலைபட்டு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள சங்கர் மற்றும் செயலாளர் ரமேஷ் ஆகியோர், வீடு கட்டும் பணி ஆணை வழங்க பயனாளிகளிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், லஞ்சம் அளித்த ஒரு சில பயனாளிகள் தவிர மற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையைில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் பயனாளி ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.