கோயில் பூசாரிகள் நல சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு மே 22ல் நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

சென்னை: கோயில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் சென்னை மண்டல மாநாடு மே 22ல் நடக்கிறது. இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார்  என்று அச்சங்கத்தின் தலைவர் வாசு கூறினார். இது குறித்து கோயில் பூசாரிகள் நல சங்க தலைவர் வாசு கூறியதாவது: தமிழக அரசு பதவியேற்ற பிறகு அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இறைவனுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் படிப்படியாக மீட்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த அரசு ஆன்மீக அரசாகவும், பூசாரிகளுக்கு நன்மை பயக்கும் அரசாக உள்ளது. நிதி நெருக்கடி இருந்த போதிலும் பூசாரிகள் கேட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

அன்னை தமிழில் அர்ச்சனைகள், 10 கோயில்களில் பிரசாத விநியோகம், ஏராளமான கோயில்களில் திருப்பணி என எண்ணற்ற செயல் திட்டங்களை அரசு நிதி மூலம் மனமுவந்து நிறைவேற்றி வருகிறது. இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் மே 22ம் தேதி கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சென்னை மண்டல மாநாடு நடைபெற உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல மாநாடு முடிந்த பின்பு கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: