அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெரும் வகையில் ஆட்சி பணியை உருவாக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை

சென்னை:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு எழுதி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குனர்களாகவும், இணை இயக்குனர்களாகவும் பதவிவகிக்கும் ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 பேர், தங்களை மாநில அரசின் சிவில் சர்வீசில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த 2008ம் ஆண்டு அவர்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில சிவில் சர்வீசில் சேர்க்காததால் இந்திய ஆட்சிப் பணியான ஐஏஎஸ் அந்தஸ்தை பெற முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு பணிக்கான சிறப்பு விதிகளில் துணை ஆட்சியர் என்ற அந்தஸ்தின் கீழ் சில பதவிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை திருத்தம் செய்யாமலும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும் உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் உள்ளிட்டோரை மாநில சிவில் சர்வீசில் சேர்ப்பது சாத்தியமில்லை.  மாநில சிவில் சர்வீசின் கீழ் வராதவர்களில் 5 சதவீதத்தினரை நியமிக்கவும் விதிகள் உள்ளது என்று தெரிவித்தார்.

 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருடன் குரூப் 1 தேர்வின் மூலம் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டவர்கள் சமமாக நடத்தப்படாதது வருத்தத்திற்குரியது. வருவாய் துறை அதிகாரிகள் மட்டும் 7 அல்லது 8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்று விடும் நிலையில், பிற துறைகளில் உயர்ந்த பதவியில் இருந்தபோதும், இந்திய ஆட்சி பணி அந்தஸ்து கிடைக்க  30 ஆண்டுகளாகிறது. திறமையான அதிகாரிகளை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில், கேரளாவில் உள்ளது போல தமிழகத்திலும் அனைத்து துறைகளின் குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சி பணியை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.  துணை ஆட்சியர் அந்தஸ்தில் வரக்கூடிய பதவிகளை கண்டறிவதற்கான குழுவை 6 மாதங்களில் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: