சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு எழுதி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குனர்களாகவும், இணை இயக்குனர்களாகவும் பதவிவகிக்கும் ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 பேர், தங்களை மாநில அரசின் சிவில் சர்வீசில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த 2008ம் ஆண்டு அவர்கள் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மாநில சிவில் சர்வீசில் சேர்க்காததால் இந்திய ஆட்சிப் பணியான ஐஏஎஸ் அந்தஸ்தை பெற முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு பணிக்கான சிறப்பு விதிகளில் துணை ஆட்சியர் என்ற அந்தஸ்தின் கீழ் சில பதவிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றை திருத்தம் செய்யாமலும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும் உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் உள்ளிட்டோரை மாநில சிவில் சர்வீசில் சேர்ப்பது சாத்தியமில்லை. மாநில சிவில் சர்வீசின் கீழ் வராதவர்களில் 5 சதவீதத்தினரை நியமிக்கவும் விதிகள் உள்ளது என்று தெரிவித்தார்.