சிதம்பரம் கோயிலில் இம்மாத இறுதிக்குள் நேரடியாக ஆய்வு; கோயில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் நடவடிக்கை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இம்மாத இறுதிக்குள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டை சித்தி முத்தி விநாயகர் கோயில், பெரியபாளையத்து அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர்கள் முரளிதரன், ஹரிகரன், 118 வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

 

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சட்டப்பூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

 

பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளித்ததின் மூலம் எதிர்காலத்தில் இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்கும் சமமான அரசாக இந்த அரசு உள்ளது. ஆர்.ஏ.புரம் பகுதியில் தனி நபர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளோம். கோயில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: