தாளவாடியில் திடீர் பரபரப்பு ஊருக்குள் புகுந்த புள்ளிமானை விரட்டிய தெருநாய்கள்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன. புள்ளிமான்கள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் நுழைவது வழக்கம். இந்நிலையில் நேற்று தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புள்ளிமான் தாளவாடி திப்பு சர்க்கிள் பகுதியிலுள்ள ஆரிப் பெய்க் என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது.

புள்ளிமானை கண்ட அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் மானை துரத்தின. நாய்கள் துரத்தியதால் தலை தெறித்து ஓடிய புள்ளிமான் அப்பகுதியில் உள்ள ஷெரீப் என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. புள்ளிமான் வீட்டிற்குள் புகுந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானை பிடித்து வேனில் ஏற்றி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: