முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்.!

டெல்லி: முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில் நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால் பல்வேறு தரப்பினர் முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) புதன்கிழமை ஒன்றிய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை  இந்திய மருத்துவ சங்கம் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இதனிடையே நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி எம்பிபிஎஸ் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories: