மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சென்னை மாநகர காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சென்னை மாநகர காவல்துறையினருக்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்தினார். கடந்த 7.5.2022 அன்று சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய அவ்வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கை சேர்ந்த அவனது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறையினரால் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அவர்கள் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து 1127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள்,  வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இக்கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திருமதி திஷா மிட்டல், இ.கா.ப., காவல் உதவி ஆணையர்கள் திரு. எம். குமரகுருபரன் மற்றும் திரு. டி. கௌதமன், காவல் ஆய்வாளர் திரு. எம். ரவி, உதவி ஆய்வாளர்கள் திரு. சி. கிருஷ்ணன், திரு. வி. மாரியப்பன், திரு. எம். அன்பழகன், காவலர் நிலை-I திரு. டி. சங்கர் தினேஷ், காவலர் திரு. எஸ். கதிரவன் ஆகியோரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி, வாழ்த்தினார்.

இந்நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., கூடுதல் காவல் ஆணையர் முனைவர் என். கண்ணன், இ.கா.ப., காவல் இணை ஆணையர் (தெற்கு) திரு. பிரபாகரன், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: