கோயிலில் ஆடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வழக்கு விண்ணப்பித்தவருக்கு அபராதம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை திருப்பூர் மாவட்டம் உடையர்பாளையம் கிராமத்தில் ஸ்ரீஉச்சிமாகாளி அம்மன் கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதேபோல, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வகுரம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பெரியசாமி என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் சின்னக்கமையம்பட்டு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ரமேஷ் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது திருப்பூர் மாவட்ட கோயிலுக்கு அனுமதி கோரி காவல்துறையில் விண்ணப்பித்த அன்றே வழக்கு தொடர்ந்திருப்பது தெரியவந்தது. விண்ணப்பத்தை பரிசீலிக்க காவல்துறைக்கு போதிய அவகாசம் வழங்காமலும், நீதிமன்றத்தில் ஆதாரங்களை மறைத்தும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கு தொடர்ந்தவருக்கு 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். இதைபோலவே மற்ற இரு மனுக்களும் காவல்துறை பரிசீலிக்க அவகாசம் வழங்காமல் தொடரப்பட்ட வழக்குகள் எனக் கூறி அந்த மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: