சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்துவரும் நிலையில், துணைவேந்தர்களை அரசே நியமிக்க வழிவகை செய்ய, வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று திருத்தம் மேற்கொண்டு நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொடர்ச்சியாக சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வேந்தராகவும் முதலமைச்சரே இருப்பார் என்று சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:1949-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழக சட்டம், 1991-ம் ஆண்டு தெலங்கானா பல்கலைக்கழக சட்டத்தில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிப்பது, தொடர்பான மாநில அரசானது அதிகாரம் கொண்டுள்ளது.