செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இடி மின்னல், சூறைகாற்று மழை பெய்தது. அதிவேக காற்று வீசியதால் செங்கல்பட்டு, வல்லம், மேலமையூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. நேற்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மேற்கண்ட பகுதிகள் இருளில் மூழ்கின. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக, புலிப்பாக்கம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரயிலில் வந்த பயணிகள் சிரமத்துக் குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மரத்தை அகற்றிய பிறகு ரயில் சேவை துவங்கப்பட்டது. சூறைகாற்றில் செங்கல்பட்டு ரயில் நிலைய மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.