சென்னை: சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்காக ஆவணங்களை பதிவு செய்ய முத்திரை தீர்வை கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து பத்திரப்பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். தற்சார்பு இந்தியா திட்டத்தில், (ஆத்ம நிர்பார் பாரத்) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்த சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதற்காக, சார்பதிவாளர் அலுவலகங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கொரோனா கால கட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்கள் பெற முத்திரை தீர்வ கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதையேற்று கடன் பெறுவதற்கான ஆவணங்களை பதிவு செய்வதற்கான முத்திரை தீர்வை கட்டணம் வசூலிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டன. அதே போன்று பதிவு கட்டண்ம 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைத்து கடந்த 2020 நவம்பரில் தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து ஓராண்டிற்கு இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்ன.
இந்த நிலையில், 2022-2023ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில், தற்சார்பு இந்தியா திட்டத்தில் 130க்கும் மேற்பட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கில் 2023 மார்ச் மாதத்திற்குள் ரூ.50 ஆயிரம் கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன் கருதி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான ஒப்பந்ததை பதிவு செய்வதற்கான முத்திரை தீர்வை விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தொழில்துறை ஆணையர் பரிந்துரையின் பேரில், பத்திரப்பதிவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, முத்திரை தீர்வை கட்டணத்துக்கு டிசம்பர் 31ம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.