திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா பரவுகிறது. நேற்று மலப்புரம் மாவட்டத்தில் இந்த நோய் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அசுத்தமான தண்ணீர் மற்றும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் ஷிகெல்லா பாக்டீரியா பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். கேரளாவில் கடந்த சில வருடங்களாக கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் இந்த நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் 6 பேருக்கு ஷிகெல்லா பரவியது. பின்னர் இந்த நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காசர்கோடு அருகே செறுவத்தூர் பகுதியை சேர்ந்த தேவநந்தா என்ற பிளஸ் 1 மாணவி அங்குள்ள ஒரு பேக்கரியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்தார்.