மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொழுக்கு மலை. இந்த மலை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக அழைக்கப்படுகிறது. கேரள, தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த கொழுக்குமலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டமும் இங்கு தான். இயற்கை முறையில் தேயிலை சாகுபடி செய்யக்கூடிய இடமும் கொழுக்குமலைதான். இங்கு சூரிய உதயம் காண்பது இந்த இடத்தின் சிறப்பு. அதிகாலையில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே சூரியன் உதிப்பதை காண்பது நம்மை சொர்க்கத்தில் இருப்பது போல் உணரச் செய்யும்.