அரவக்குறிச்சி பகுதியில் சீசன் துவக்கம் மரங்களில் காய்த்து தொங்கும் முருங்கை காய்கள்

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை சீசன் ஆரம்பித்துள்ளது. முருங்கை மரங்களில் காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகின்றன.அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கை காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், கேரளா மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி மவுசு உள்ளது.

ஆகையால் அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், ஈசநத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.இந்நிலையில் கடந்த மாதங்களில் முருங்கை மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கியது. தற்போது இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் சீசனுக்காக அறுவடை செய்ய அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை தோட்டங்களில் அதிக அளவில் முருங்கைகாய்கள் காய்த்து தொங்குகின்றன.

தற்போது விவசாயிகள் முருங்காய் அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவர்கள் தமிழகத்தின் சென்னை, கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் மூடை போட்டு அனுப்பி வருகின்றனர்.சென்ற மாதங்களில் முருங்கை கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை இருந்தது. தற்போது கிலோ ரூ.30 விற்பனையாகின்றது. சில்லரை விற்பனையில் ஒரு காய் ரூ.5க்கு விற்பனையாகின்றது.

Related Stories: