மதுரை: தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று மதுரை ஆதீனம் பாராட்டு தெரிவித்திருக்கிறார். மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன மடத்தில் குருபூஜையை ஒட்டி ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே 22ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருந்தார். இதையடுத்து மரபுப்படி பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கோரி குன்றக்குடி, மயிலம், பேரூர் ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தன. வழக்கம் போல நிகழ்ச்சி நடைபெற ஆவண செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.