தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்: மதுரை ஆதீனம் பேட்டி

மதுரை: தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று மதுரை ஆதீனம் பாராட்டு தெரிவித்திருக்கிறார். மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன மடத்தில் குருபூஜையை ஒட்டி ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே 22ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருந்தார். இதையடுத்து மரபுப்படி பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கோரி குன்றக்குடி, மயிலம், பேரூர் ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தன. வழக்கம் போல நிகழ்ச்சி நடைபெற ஆவண செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

அதன்பின் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்ல விதிக்கப்பட்ட தடையை மயிலாடுதுறை கோட்டாட்சியர் நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில் தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம், இந்து மதத்தை இழிவாக பேசுவது யாராக இருந்தாலும் நான் கேள்வி கேட்பேன், குரல் கொடுப்பேன் என்று கூறினார். தமிழக அரசு ஆன்மீக அரசா என்பது குறித்து இப்போது நான் கருத்து சொல்ல மாட்டேன் என்றும்  மதுரை ஆதீனம் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: