சென்னையில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் முன்பதிவு விவர அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 63 சமுதாய கூடங்களும், 2 கலையரங்கங்களும் பொதுமக்களின் குடும்ப சுபநிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக நாள் வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. சமுதாயக்கூடம் முன்பதிவு செய்வதற்கு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பும், கலையரங்கம் முன்பதிவு செய்வதற்கு 3 மாதத்திற்கு முன்பும் முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி, முன்வைப்பு தொகை யை ஏதேனும் ஒரு வங்கியிலிருந்து ‘Revenue Officer, Corporation of Chennai’ என்ற பெயரில் வரைவோலை செலுத்த வேண்டும். அனைத்து சமுதாயக் கூடங்கள், கலையரங்கங்கள் முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

சமுதாயக் கூடங்கள்/ கலையரங்கங்கள் காலியாக உள்ளதா மற்றும் கட்டண விவரங்களை பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் உள்ள முன்பதிவு செய்யும் பிரிவு அல்லது chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், சமுதாய கூடங்களில் முன்பதிவானது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற அனைத்து சமுதாயக் கூடத்திலும் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள், கட்டண விவரம் மற்றும் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் அறியும் வகையில், ஒரு வாரத்தில் வைக்க அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: