வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்க கடலில் இன்று புதிதாக புதிய புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்து புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் மாலை வட ஆந்திரா, ஒடிசா கடற்கரைக்கு சென்று பின்னர் மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் ஆந்திரா அல்லது ஒடிசாவில் கரையை கடக்காமல் கடற்கரைக்கு இணையாக பயணிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில்  லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதையடுத்து கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.   

Related Stories: