தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை மக்களுக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு: அரசு அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை மக்களுக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக அரசு அலுவலர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் தலைவர் சண்முகராஜன் வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாவினை நம்பி இருக்கும் இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், உணவு பஞ்சம் மற்றும் மருத்துவ அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் உணவு பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றினை இலங்கையில் உள்ள தொப்புள் கொடி உறவுகளுக்கு அளிக்க வேண்டும் எனவும், அதற்காக தங்களது பங்களிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியாக அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில், அரசு அலுவலர்கள் இலங்கை மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களது ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட உள்ளோம். எனவே, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களது ஒரு நாள் ஊதியத்தினை மே 2022ம் மாத சம்பளத்தில் பிடித்துக்கொள்வதற்கான அரசாணை பிறப்பித்து உத்திரவிடுமாறு முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: