ஜெய் பீம் பட காட்சிகள் விவகாரம் சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய வேண்டும்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய்பீம் படம்  எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்யுமாறு வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு  சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் சூர்யா  நடித்துள்ள ஜெய்பீம் படத்தில், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தேசப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும்,  மத சாதி கலவரத்தைஉருவாக்கும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில், அவர்களை  இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், அவர்கள்  வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு மத மாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை என்ற பெயரில் பெற்றும், அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்தும் அந்த பணத்தில் ஜெய்பீம் படத்தை எடுத்துள்ளனர். விளம்பர செலவாக ஒரு கோடி ரூபாயை கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அந்நிய செலாவணி குற்றம்  செய்துள்ளனர். அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

 இதுகுறித்து,  தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை  ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி வேளச்சேரி போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த  சைதாப்பேட்டை நீதிமன்றம், மனுதாரர் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு  செய்து, முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்ய வேண்டும் என்று வேளச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: