சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வந்துள்ளார்.
இலங்கைக்கு ரூ.123 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 137 வகையான மருந்து பொருட்கள், 500 டன் பால் பவுடர்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தநிலையில் திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும். அதைத் தவிர திமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.