உத்தரபிரதேச முதல்வர் யோகியுடன் நடிகை கங்கனா சந்திப்பு; மாலை பொழுதில் மகிழ்ச்சி ஏற்பட்டதாக பதிவு

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை, பாலிவுட் நடிகை கங்கனா நேற்று லக்னோவில் சந்தித்தார். அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி யோகியை சந்தித்த கங்கனா, தற்போது இரண்டாவது முறையாக சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளபக்கத்தில், ‘சமீபத்திய தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது அன்பு, கருணை, அக்கறை ஆகியன, இந்த மாலைப் பொழுதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது ஈடுபாடு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரை சந்தித்ததை பணிவுடவும், கவுரமாகவும், உத்வேகமானதாகவும் உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார். பாஜக ஆதரவாளராக கருதப்படும் கங்கனா, சமீபத்தில் நடந்த உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதை தொடர்ந்து உத்தரபிரதேச முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கிடையில், கங்கனா நடித்துள்ள ‘தாகத்’ என்ற திரைப்படம் மே 20ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் ‘தேஜாஸ்’ படத்திலும் நடித்துள்ள அவர், தற்போது யோகி ஆதித்ய நாத்தை சந்தித்தது அரசியல், சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: