கோட்டை ரயில் நிலையம் அருகே கழிவறையில் கொல்லப்பட்ட நபர் ஓராண்டுக்கு பிறகு வடமாநில வாலிபர் கைது: கத்திமுனையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம்

சென்னை:  சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே ஈவெரா சாலை மற்றும் முத்துசாமி பாலம் சந்திப்பு அருகே உள்ள பயன்பாடற்ற பொது கழிப்பிடத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை பூக்கடை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த நபர் 30 முதல் 35 வயது உள்ள நபர் என்றும், இவர் சாதாரணமாக இறக்கவில்லை என்றும், கத்தியால் குத்தப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை உடலை கைப்பற்றிய 5 நாட்களுக்கு முன்பு நடந்து இருக்க கூடும் என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

அதை தொடர்ந்து வாலிபரை கொலை செய்த நபர் குறித்து போலீசார் புகைப்படத்துடன் விசாரணை நடத்தினர். அப்போது வியாசர்பாடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு காணாமல் போன சதீஷ்குமாரின் பெற்றோரை பூக்கடை போலீசார், அழைத்து வந்து இறந்த நபரின் அடையாளங்கள் மற்றும் அவர் அணிந்து இருந்த உடைகளை காண்பித்து விசாரணை நடத்தினர். அப்போது சரியாக அடையாளம் காணமுடியவில்லை. பின்னர் போலீசார் சதீஷ்குமாரின் புகைப்படம் மற்றும் கழிவறையில் இறந்து கிடந்த நபரின் மண்டை ஓட்டினை தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பி பார்த்ததில் சத்தீஷ்குமாரின் உடலுடன் ஒத்துப்போனது தெரியவந்தது.

எனினும், போலீசார் சந்தேகத்தின் படி பெற்றோர் மற்றும் சகோதரியின் ரத்த மாதிரிகள் எடுத்து இறந்த நபரின் ரத்த மாதிரிகளை வைத்து ‘டிஎன்ஏ’ பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தியதில், இறந்த நபர் சதீஷ்குமார் என உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார், சதீஷ்குமாரை கொலை செய்த நபர் குறித்து சிசிடிவி பதிவுகளை பெற்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், சதீஷ்குமாருடன் சம்பவத்தன்று ஒரு வாலிபர் உடன் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. எனினும் அந்த நபர் சிக்கவில்லை.

இந்நிலையில் தீவிர தேடுதலுக்கு பிறகு கடந்த 30ம் தேதி பாரிமுனை பகுதியில் சதீஷ்குமாரை கொலை செய்த நபர் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் விரைந்து ெசன்று அந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பகதூர்(26) என்றும், இவன் சதீஷ்குமாரை கொலை செய்துவிட்டு சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

பின்னர் கொலை குறித்து கைதுசெய்யப்பட்ட பகதூர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

‘ அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வேலை தேடி சென்னைக்கு பகதூர் வந்துள்ளார். சரியாக வேலை கிடைக்காததால் நடைபாதை மற்றும் நண்பர்களுடன் தங்கி பாரிமுனை பகுதியில் தினக்கூலி அடிப்படையில் சிறு சிறு வேலைகள் செய்து வந்துள்ளார். அப்போது சதீஷ்குமாருக்கு பகதூர் பழக்கமாகியுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இரவு பாரிமுனை பகுதியில் இருந்த பகதூரை, சதீஷ்குமார் ஒரு இடத்தில் வேலை இருப்பதாக கூறி அழைத்து கொண்டு கோட்டை ரயில் நிலையம் நடைமேம்பாலம் அருகில் உள்ள பயன்பாடற்ற பொது கழிப்பிடத்திற்கு வந்துள்ளார்.

பிறகு சதீஷ்குமார் திடீரென ஒரு கத்தியை எடுத்து பகதூரை மிரட்டி ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டுள்ளார். இது பகதூருக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பணம் தருவதாக கூறி கத்தி முனையில் மிரட்டி மீண்டும் ஓரினச் சேர்க்கையில் கொடூரமாக ஈடுபட்டுள்ளார். அப்போது  பகதூர் அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர் என்னை விடாமல் தொடந்து மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். இதனால் வலி தாங்க முடியாமல் சதீஷ்குமார் வைத்திருந்த கத்தியை பிடுங்கிய பகதூர், சரமாரியாக சதீஷ்குமாரை குத்தி கொலை செய்துள்ளார்.

பிறகு உடலை கழிவறையிலேயே போட்டு விட்டு ஒன்றும் தெரியாதப்படி பகதூர், சென்னையில் இருந்து ரயில் மூலம் தனது சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டார். பிறகு மீண்டும் பகதூர் சென்னைக்கு திரும்பு திட்டமிட்டார். அதேநேரம் கொலை செய்து ஒரு வருடம் ஆவதால், தன்னை போலீசாருக்கு அடையாளம் தெரியாது என்றும், கொலையை மறந்து இருப்பார்கள் என்று நினைத்து கடந்த மாதம் சென்னைக்கு பகதூர் வந்து பாரிமுனை பகுதியில் தங்கி வேலை செய்து வந்த போது, போலீசார் தன்னை பிடித்துவிட்டனர்’. இவ்வாறு குற்றவாளி பகதூர் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: