தூத்துக்குடி: கோடைமழை காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1,500 ரூபாயாக இருந்த ஒரு டன் உப்பு தற்போது 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 3,000 ஏக்கர் உப்பளங்கள் மூலம் தூத்துக்குடியில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கோடை காலத்தில் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.