சென்னை: சட்டப்பேரவையில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ ச.அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ எந்தளவிற்கு வேகமாக பரவுமோ, அதைவிட வேகமாக நடவடிக்கை மேற்கொண்டு அரசு இயந்திரம் அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. மீத்தேன் வாயு மூலமாக தீப்பற்றியது. அதை தடுப்பதற்கு, அரசு இயந்திரங்கள், அது காவல்துறையாக இருக்கட்டும், தீயணைப்பு துறையாக இருக்கட்டும் உடனடியாக நடடிக்கை மேற்கொண்டன. சென்னை மாநகராட்சியினுடைய அலுவலர்கள் எல்லாம் அங்கே முகாமிட்டு, இரவு பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டார்கள். அமைச்சர் கே.என்.நேரு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, நான், மாநகர மேயர், துணை மேயர், மண்டல குழுவின் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரெல்லாம் உடனடியாக இணைந்து அந்த பணிகளை மேற்கொண்டோம். ஸ்கை லிப்ட் என்ற மிகப்பெரிய இயந்திரம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்களெல்லாம் அதன் மேல் ஏறி பார்வையிட்டார்கள்.