சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தின் போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசுகையில் ‘‘சென்னைக்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும், முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்படுகிறது. செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான திட்டம் அரசிடம் இருக்கிறதா” என்றார். இதற்கு பதிலளித்து பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வருவதற்கு 1 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. இதே போல் ஸ்ரீபெரும்புதூரில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பது அரசுக்கு தெரியும். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து பெரும்புதூர் வரையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை போடுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவாக பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.